பா.சிதம்பரத்தைக் காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு
ஆலங்குடி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களைக் காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ராஜசேகரன், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலங்குடி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது...
காணவில்லை
ப.சிதம்பரம், எம்.எல்.ஏ. ராஜசேகரன். கடந்த சில மாதங்களாக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 மணி நேரம் கூட நிலையான மின்சாரம் இல்லை. இந்தக் குறைகளைத் தீர்க்க கூட முன்வராத சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் அவர்களையும், ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் அவர்களையும் ஆலங்குடி பொதுமக்கள் தேடுகிறார்கள். இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். இப்படிக்கு ஆலங்குடி தொகுதி பொதுமக்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.