மேட்டுப்பாளையம் அருகே மணல் லாரி ஜீப்புடன் மோதியதில் 5 பேர் பலி
மேட்டுப்பாளையம்: மணல் லாரி ஜீப் மீது மோதியதில், ஜீப் கவிழ்ந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், கோத்திரவயல், பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற சாமி (40). ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். ரவியின் மகள் சரண்யா (18). இவருக்கு கோவை அருகே நீலாம்பூரில், தனியார் மில்லில் வேலை கிடைத்து இருந்தது.
மகளை வேலையில் சேர்த்து விடுவதற்காக, ரவி ஒரு ஜீப்பை வாடகைக்கு பிடித்துக் கொண்டு குடும்பத்தினருடன் நீலாம்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்தார். வழியில் குன்னூரில் உள்ள தங்கை சாந்தி மற்றும் நண்பர் ஒளிவிளக்கு ரவி ஆகியோரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டார்.
காலை 11.30 மணி அளவில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின்ரோட்டில் குமரன்குன்று தாளத்துறை பிரிவில் ஜீப் வந்து கொண்டு இருந்தது. அப்போது கரூரில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு காரமடையை நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு லாரி, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஜீப் ரோட்டோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் ஜீப் மீது மணல் லாரியும் விழுந்து அழுத்தியது. லாரி மோதி விபத்து ஏற்பட்டதாலும், லாரி விழுந்து அழுத்தியதாலும் ஜீப் சுக்குநூறாக நொறுங்கியது.
ஜீப்பில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரவியின் மனைவி சாந்தி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தில் ரவி, தங்கை சாந்தி, மகள் சரண்யா, ஜீப் டிரைவர் ராஜேந்திரன், ஒளிவிளக்கு ரவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.