3 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை!
நெல்லை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. சங்கத்தின் நிர்வாகிகள் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து கூறினர்.
சாலைகளில் விபத்துகளில் அடிபடும் பிராணிகளை காப்பாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் தேவைப்படுகிறது என சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மேலும் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளி கல்லூரிகளில் பிராணி வதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்கள் நடத்தவும் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க சுமார் 3 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தவும் தயாராகி வருவதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 'பிராணிகள் வதை தடுப்பு சங்கம் என்ற ஒரு சங்கம் இருப்பது பலருக்கு தெரியாது. பிராணிகள் நலன் காப்பதில் அனைவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் அதிக நாய்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்ட நாய்களை அப்புறப்படுத்த கூட யாரும் முன்வருவதில்லை.
இந்த அமைப்பின் முலம் அனைவரது மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.