ஜெ. நேரில் வந்து ஆறுதல் கூறியதால் நெகிழ்ச்சியில் தங்கவேலு குடும்பம்
ஈரோடு: யாருமே பார்க்க முடியாத ஜெயலலிதா, எங்களைத் தேடி வந்ததை மறக்க மாட்டோம். உயிருள்ளவரை அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்று அதிமுகவின் பென்னாகரம் தோல்விக்காக தீக்குளித்த ஈரோடு தொண்டர் தங்கவேலுவின் மனைவி வசந்தி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
நேற்று ஈரோடு வந்த ஜெயல்லிதா, தங்கவேலுவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இது அவரது குடும்பத்தினரை உருக வைத்துள்ளது. யாருமே பார்க்க முடியாத ஜெயலலிதா, தங்களைத் தேடி வந்தது அவர்களை நெகிழ வைத்துள்ளது.
இதுகுறித்து தங்கவேலுவின் மனைவி வசந்தி கூறுகையில்,
மிகப்பெரிய கட்சித் தலைவி என் கணவரை பார்த்து சென்றது மிகவும் பெரிய விஷயம். யாரும் எளிதில் சந்திக்க முடியாதவர், என் கணவரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியதை மறக்க முடியாது.
'ஜெயலலிதா வர்றாங்க' என்று கட்சிக்காரங்க சொன்னதும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவங்க வந்ததும் கையெடுத்து கும்பிட்டேன்; அவங்களும் கும்பிட்டாங்க. என் கணவருக்கு ஆறுதல் கூறிய அவர், 'இப்படி அவசரப்பட்டீங்களே? எதுவாக இருந்தாலும் நிதானமாக செயல்பட வேண்டும். இங்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லையென்றால், சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கிறேன்' என்று கூறினார்.
ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும், நானும், எனது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்களாக இருப்போம் என்றார் வசந்தி.