காஷ்மீரில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு - தீவிரவாதிகள் அட்டகாசம்!
காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகாபோரா நகருக்கு அருகே குல்பக் கிராமத்தில் ரயில்வே பாதையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் தீவிரவாதிகள் வெடிகுண்டுவைத்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் சுமார் 2 முதல் 3 மீட்டர் வரை தண்டவாளம் தகர்த்தெறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில்பாதை கடுமையாக சேதமடைந்தது.
இன்று அதிகாலை முதல் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாதை பழுதடைந்ததால் நேற்று இரவு அந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
இதனால் புலவாமா மற்றும் அனந்தநாக் பகுதிகளில் இருந்து ஸ்ரீநகர், பாட்கம், பாரமுல்லா ஆகிய ஊர்களுக்கு தினசரி செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இந்த ரயில் பாதை, வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரை இணைக்கும் தடமாக திகழ்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தண்டவாளத்தை தகர்த்து ரயில் சேவையை முடக்குவது இதுவே முதல்முறை என போலீசார் கூறுகின்றனர்.