காஷ்மீரில் ஒரே வாரத்தில் 14 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு: காஷ்மீரில் இன்றும் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம், இந்த வாரத்தில் மட்டும் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 14ஐ தொட்டுள்ளது.
காஷ்மீருக்குள் ஊடுருவி, ரஜௌரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 27ம் தேதி பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் வனப்பகுதிக்குள் சென்றனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
இதன் பின்னர் கடந்த செவ்வாய் கிழமை அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே சுமார் 18 மணி நேரம் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் மூன்று பாதுகாப்பு வீரர்கள் மற்றும் நான்கு தீவிரவாதிகள் பலியானார்கள். இதையடுத்து வனப்பகுதியில் தப்பிச் சென்ற தீவிரவாதிகளை தேடிப்பிடித்து சுற்றிவளைக்க பாதுகாப்பு படையினர் தொடர்ந்து போராடினர்.
இதன் பயனாக நேற்றைய தினம் மேலும் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்றைய தினம் நடந்த சண்டையில் எஞ்சியிருந்த 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் கூட்டாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீருக்குள் கடந்த மாதம் ஊடுருவியிருப்பது தெரியவந்தது.
கொல்லப்பட்டவர்களிடம் பாகிஸ்தானில் வாங்கப்பட்ட மொபைல் போன் சிம் கார்டுகள், ஜிபிஎஸ் சாதனங்கள், எம்பி3 பிளேயர்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.