ஒரத்தநாடு அருகே பெண், 3 குழந்தைகள் மர்ம மரணம்
ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மர்மமான முறையில் பெண்ணும், அவரது மூன்று குழந்தைகளும் தூக்கில் பிணமாகத் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரத்தநாட்டை அடுத்துள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயக் கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு உமா என்ற மனைவியும், அனு, ஆர்த்தி என்ற மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் இருந்தனர்.
ஆறுமுகத்திற்கும், உமாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு மோதல் மூண்டது. மணிகண்டன் பிறப்பதற்கு முன்பு வரை ஆண் குழந்தை இல்லாத்தால், உமாவின் தங்கை வானதியை கல்யாணம் செய்து வைக்குமாறு கோரி வற்புறுத்தி வந்தார் ஆறுமுகம். இதுதொடர்பாகவே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் மணிகண்டன் பிறக்கவே, வானதியைத் திருமணம் செய்யும் திட்டம் தவிடுபொடியானதால் ஆத்திரமடைந்தார் ஆறுமுகம். இதனால் வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
இந்த நிலையில் உமாவும், அவரது மூன்று குழந்தைகளும் தூக்கில் பிணமாகத் தொங்கினர். அப்போது வீட்டுக்கு வந்த உமாவின் தம்பி புண்ணியமூர்த்தி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஆறுமுகத்திற்கு ஒரு பெண் எழுதிய காதல் கடிதங்கள் சில சிக்கியுள்ளன. ஆறுமுகமும் தலைமறைவாக உள்ளார். எனவே அவர்தான் நான்கு பேரையும் கொலை செய்து தூக்கல் தொங்க விட்டு விட்டு தப்பியிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்த்து.
இந்த நிலையில் இன்னொரு தகவல் போலீஸாருக்குக் கிடைத்த்து. அதாவது நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்குப் போயுள்ளார் ஆறுமுகம். அங்கு தனது உடையைக் கழற்றி விட்டு புது வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு உரக்கடைக்குப் போயுள்ளார். அங்கு பூச்சி மருந்தை வாங்கியுள்ளார்.
எனவே ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து ஆறுமுகத்தின் உடலைத் தேடும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.