சென்னை அருகே கொட்டப்பட்ட காலாவதி மருந்துகள் மூட்டை மூட்டையாக சிக்கின
சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், 2 டன் அளவிலான காலாவதி மருந்துகளை மூட்டை மூட்டையாக கட்டி சாலையோரத்தில் வீசி விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 லாரிகளில் அந்த காலாவதி மருந்துகளைக் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை போலீஸாரும், அதிகாரிகளும் வேட்டையாடி வருகின்றனர். இதனால் காலாவதியான மருந்துகளை ஆங்காங்கு குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அருகே காயிரம்பேடு என்ற இடத்தில், சாலையோரம் 2 டன் அளவிலான காலாவதி மருந்துகளை 3 லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் சென்றுள்ளனர் சிலர்.
மூட்டை மூட்டையாக இவை வீசப்பட்டிருந்த்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை தமிழகத்திலேயே இவ்வளவு அதிகமான காலாவதியான மருந்துகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தகவல் அறிந்து போலீஸாரும், அதிகாரிகளும் விரைந்து வந்தனர். விசாரணையில் மருந்துக் கடைகளிருந்து இவை கொண்டு வரப்படவில்லை என்று தெரிய வந்த்து. உள்ளூர் மக்கள் கூறுகையில், அதே பகுதியில் இருக்கும் மெடோபார்ம் என்ற தனியார் மருந்து நிறுவனம்தான் இதைக் கொட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
வீசப்பட்ட மருந்துகளில், பெரும்பாலானவை இருமல் டானிக் ஆகும். இவை இருந்த அட்டைப் பெட்டிகளில் பல்வேறு ஊர்களின் மருந்துக் கடைப் பெயர், முகவரிகள் இருந்தன. ஆனால் அவை போலி முகவரிகள் என்பது தெரிய வந்துள்ளது.
இவை காலாவதியான மருந்துகள் மட்டுமல்லாமல் போலி மருந்துகளாகவும் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.