பட்டமளிப்பு கவுன் அணிவது காட்டுமிராண்டித்தனமானது – ஜெயராம் ரமேஷ் ஆவேசம்
போபாலில் நடந்த இந்திய வன நிர்வாக கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ஜெயராம் ரமேஷ். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவோருக்கு பட்டமளிப்பு கவுன் அணிவிக்கப்படுவது வழக்கமாகும்.
அதன்படி ஜெயராம் ரமேஷுக்கும் அது அணிவிக்கப்பட்டது. இதையடுத்து மைக்கைப் பிடித்த ஜெயராம் ரமேஷ். இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளைக் கடந்தும் நாம் ஏன் இன்னும் காட்டுமிராண்டித்தனமான வெள்ளையர் காலத்துப் பழக்க வழக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.
இதை நான் விரும்பவில்லை என்று கூறினார். அத்தோடு நில்லாமல் வேகமாக தனது பட்டமளிப்பு கவுனையும் கழற்றி தூரப் போட்டார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் பேசுகையில், சாதாரண உடையில் வந்து பட்டங்களை வாங்கக் கூடாதா அல்லது பட்டங்களைக் கொடுக்கக் கூடாதா?. போப்பாண்டவர்களைப் போல உடை அணிந்து வந்துதான் பட்டங்களைக் கொடுக்க வேண்டுமா, பெற வேண்டுமா?. இதை மாற்ற வேண்டும் என்றார் ஜெயராம் ரமேஷ்.
ஜெயராம் ரமேஷின் இந்தப் பேச்சு மற்றும் செயலால் மாணவர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டாலும் கூட அதன் பின்னர் செமத்தியான கைத்தட்டல் கிடைத்தது.