வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கான வாடகை குறைப்பு!
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மாத வாடகையை குறைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், குறைந்த கட்டணத்தில் குடியிருப்புகள் மாத வாடகைக்கு விடப்படுகிறது.
சென்னையில் பொதுவாக வசூலிக்கப்படும் வீட்டு வாடகைக்கும் இந்த குடியிருப்புகளின் வாடகைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாகவே இருப்பது வழக்கம்.
பெரும்பாலும், அரசியல்வாதிகளின் உறவுக்காரர்கள் - நட்பு வட்டாரங்கள், அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செல்வாக்கு பெற்ற குடிமக்களுக்கு மட்டுமே இந்த குடியிருப்புகள் கிடைக்கும்.
நகரின் மையப்பகுதியில், சொற்ப வாடகை கட்டணத்தில் இவர்கள் இந்த குடியிருப்புகளை வாழ்நாள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த 2004ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதை எதிர்த்து குடியிருப்புகளில் வசிப்போர், நீதிமன்றத்தை நாடியபோது, இறுதியில் உச்சநீதிமன்றம் வாடகை கட்டணத்தை குறைக்கக்கூடாது என தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து வாடகையை 50 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது வாரியத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த கருணாநிதி, வாடகையை 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து 50 சதவீதம் என்பதற்கு பதிலாக, 20 சதவீதம் என்று குறைத்து வசூலித்தால் போதும் என வாரியத்திடம் அறிவுறுத்தி உள்ளார்.
இனி வருங்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாடகையை 5 சதவீத அளவுக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்றும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வசூலித்து வரும் தண்ணீர் வரியை பொறுத்தவரை, குடிநீர் வாரியத்திற்கு எவ்வளவு செலுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு குடியிருப்புகளில் வசிப்போரிடமிருந்து வசூலித்தால் போதும் என்றும் கருணாநிதி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவுரைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உரிய தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தும் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.