ப.சிதம்பரம் பயணிக்க இருக்கும் பகுதியில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல்!
மிட்னாப்பூர்: மேற்கு வங்கத்தில் நக்சல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நாளை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேற்குவங்கம், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட் நக்சல் ஆதிக்கத்தை அகற்றி பாதுகாப்பை பலப்படுத்த கடந்த சில வாரங்களாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், இங்குள்ள உயர் அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாளை லால்கருக்கு வர உள்ளார்.
இதையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள், சிறப்பு மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீசார் என ஏராளமான பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் உளவுப் பிரிவு போலீசாரும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லால்கர் பகுதியில் பாமல் என்ற பகுதியில், சாலையில் மாவோயிஸ்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.