காலாவதி, போலி மருந்து வழக்கு – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
சென்னை: காலாவதி மருந்து மற்றும் போலி மருந்துகள் விற்பனை தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்கி விட்டதாக சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் கூறியுள்ளார்.
சென்னையில் வெடித்து வெளிக்கிளம்பிய காலாவதி மருந்து விற்பனை விவகாரம் பல மாநிலத் தொடர்புகளைக் கொண்டதாக வியாபித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சி சுந்தரம், சஞ்சய்குமார், சேகர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் கூறுகையில், சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கும்பகோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படைகள் எஸ்.பிக்களைத் தலைவர்களாகக் கொண்டு செயல்படுகின்றன. டிஐஜி ஒருவர் விசாரணையை மேற்பார்வையிட்டு வருகிறார்.
சோதனை, கைது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம். இதற்காக நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார்.
--