சிங்கூர் நிலங்களுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்தது டாடா
சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ தயாரிப்பு தொழிற்சாலை அமையவிருந்தது. ஆனால் த்ரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி மற்றும் உள்ளூர் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக சிங்கூரிலிருந்து குஜராத்துக்கு தொழிற்சாலையை மாற்றியது டாடா.
ஆனாலும் நிலத்தைக் காலி செய்யவில்லை. இந்த நிலம் 99 வருட குத்தகை அடிப்படையில் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ 1 கோடி வீதம் முதல் 5 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்துக்கு டாடா குத்தகை செலுத்த வேண்டும். அதன்படி ஆண்டுதோறும் குத்தகை செலுத்தி வருகிறது டாடா.
ஆனால் பயன்பாட்டில் இல்லாத சிங்கூர் நிலத்தை டாடாவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்போவதாக மேற்கு வங்க தலைமைச் செயலர் அறிவித்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ரூ 1 கோடிக்கான காசோலையை அரசுக்கு அனுப்பியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிர்வாகம். இதனால் மேலும் ஒரு ஆண்டுக்கு டாடா குத்தகை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைவதற்கான சாத்தியம் இன்னும் உள்ளதாகக் கூறப்படுகிறது.