ஆர்.பி.எஃப் தேர்வில் முறைகேடு - அதிகாரிகள் விசாரணை
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப் ) எஸ்ஐ தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் குழு விசாரணையை துவங்கியுள்ளது.
திருச்சி ஆர்பிஎஃப். பயிற்சி மையத்தில் 120 எஸ்ஐகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற்றது.
அப்போது, இந்த தேர்வில் பங்கேற்ற வட மாநிலங்களை சேர்ந்த எஸ்ஐகள் பலர் தேர்வில் காப்பியடித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தேர்வு கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்போடு செய்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிககை எழுந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து ஆர்பிஎஃப் துணை பாதுகாப்பு அதிகாரி சின்ஹா தலைமையிலான குழு திருச்சி வந்தனர்.
இவர்கள் திருச்சி ஆர்பிஎஃப் கமிஷனர் காந்தி, மதுரை கமிஷனர் மீனா மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை முடிவில் தான் அடுத்த நடவடிக்கை பற்றி தெரிய வரும் என விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.