இலங்கை தப்பிச் செல்ல முயன்ற 6 அகதிகள் கைது
ராமேஸ்வரம்: முகாம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இலங்கைக்குச் செல்ல முயன்ற 6 அகதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே 4வது மணல் தீடை பகுதியில் இவர்கள் மீட்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆறு பேரும் கரூர், ஈரோடு, திருச்சி, பவானிசாகர் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்காக இவர்கள் ஒரு ஏஜென்டை அணுகினர். அவர்கள் இவர்களிடம் ரூ. 12,000 வாங்கிக் கொண்டு படகில் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து ஆறு பேரும் முகாம்களை விட்டு வெளியேறி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். மார்ச் 31ம் தேதி இவர்கள் ஆறு பேரையும் படகோட்டி அழைத்துச் சென்று தனுஷ்கோடி அருகே உள்ள நான்காம் தீடை மணல் பகுதிக்கு அழைத்து வந்து இதுதான் தலைமன்னார். இங்கிருந்து யாழ்ப்பாணம் போய் விடலாம் என்று கூறி விட்டு விட்டுச் சென்று விட்டார்.
தலைமன்னார் என்று நம்பி இறங்கிய அந்த ஆறு பேருக்கும் பிறகுதான் அது மணல் தீடை என்பது தெரிய வந்தது. அந்தப் பகுதி வழியாக எந்தப் படகும், கப்பலும் வராததால், அவர்கள் தவித்தபடி இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோந்து சென்ற கடலோரக் காவல் படை படகில் இருந்த வீரர்கள் இவர்களைப் பார்த்து மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
முகாம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் போனதால் இவர்களைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.