விசாரணைக் கைதி மர்ம மரணம் – போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய உறவினர்கள்
திண்டுக்கல்: போலீஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசாரணைக் கைதி மர்மமான முறையில் மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் வட மதுரைக் காவல் நிலையத்தைத் தாக்கி சூறையாடி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் கோவில் திருவிழா நடந்தது. அதில் கலந்து கொண்ட செந்தில்குமார் என்ற 33 வயது வாலிபர் குடித்து விட்டு கலாட்டாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் வேடசந்தூர் மாஜிஸ்திரேட் முன்பு அவரை ஆஜர்படுத்திய போலீஸார் பிறகு செந்தில்குமாரை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இன்று காலை திடீரென செந்தில்குமார் இறந்து விட்டார்.
இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமாரின் உறவினர்கள், போலீஸார் அடித்த்தால்தான் செந்தில்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து காவல் நிலையைத்தைத் தாக்கி சூறையாடினர். இதையடுத்து போலீஸார் கூட்டத்தினரை கலைத்து விரட்டினர். உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.