மனைவி, குழந்தைகளை கொன்ற மீனவருக்கு 4 ஆயுள் தண்டனை
நாகர்கோவில்: மனைவி மற்றும் மகன்களை தீவைத்து கொளுத்தி கொன்ற மீனவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த மீனவர் ஆன்ட்ரியாஸ். இவரது மனைவி மேரிசுதா. இவர்களுக்கு சகாய அனிஸ்டாஸ், அனிஸ்டாஸ் என்ற மகன்களும், சகாய அபிஸ் என்ற மகளும் இருந்தனர்.
ஆன்ட்ரியாசின் தாய் மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். மேரி சுதாவும் அவரோடு இணைந்து வியாபாரத்தை கவனித்துள்ளார்.
அப்போது மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதை ஆண்டரியாஸ் கண்டித்தார். இதனால் அவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு வீடடில் தூங்கி கொண்டிருந்த மேரிசுதா மற்றும் குழந்தைகள் மீது ஆண்டரியாஸ் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் தீயில் சிக்கி 4 பேரும் இறந்தனர்.
மூத்த மகன் சகாய அனிஸ்டாஸ் உயிர் தப்பினான். இச்சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் ஆன்ட்ரியாசை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற வழக்கில் ஆன்ட்ரியாசுக்கு 4 ஆயுள் தண்டனையும் 9000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.