ப.சிதம்பரம் வார்த்தையை அளந்து பேச வேண்டும்: புத்ததேவ் சீற்றம்
கோல்கத்தா: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி கடுமையாக கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நக்சல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றார்.
அப்போது லால்கரில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வெகுவாக சீர்குலைந்திருந்திருப்பதாக கூறினார்.
சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவது முதல்வர் புத்ததேவின் கையில் தான் உள்ளதை என்பதை குறிப்பிடுவதற்காக 'பக் ஸ்டாப்ஸ் வித்' என்ற வார்த்தையை சிதம்பரம் பேட்டியின் போது பயன்படுத்தினார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள முதல்வர் புத்ததேவ், 'சிதம்பரம் வார்த்தையை அளந்து பேச வேண்டும். அவர் பயன்படுத்துகிற வார்த்தை அரசியல்வாதிகளுக்கானது அல்ல. அது ஒரு கொச்சைத்தனமான வார்த்தை.
என் கடமை எது என எனக்குத் தெரியும். நான் என் வேலையை பார்க்கிறேன். அவர் அவருடைய வேலையை பார்க்கட்டும்.
அவர் உள்துறை அமைச்சர் என்ற பதவியில் இருந்து கொண்டு ஒரு மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து குறை கூறவும், கருத்து கூறவும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.
ஆனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நான் தான். உண்மையில் அவருக்கு அக்கறை இருந்தால் இங்கு பிரச்னை செய்யும் எதிர்க்கட்சிகளிடம் சொல்லி மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அவர் கேட்டுக்கொள்ள வேண்டும்' என வெடித்துத் தள்ளினார்.