For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவைப்பட்டால் சோயப் மாலிக்கைக் கைது செய்வோம் – ஹைதராபாத் கமிஷனர்

By Staff
Google Oneindia Tamil News

Shoib Malik
ஹைதராபாத்: விசாரணையில் சோயப் மாலிக் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் கிடைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று ஹைதராபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சானியா மிர்ஸாவின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் குழுவினர் அங்கு வைத்து சோயப்பிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ஆயிஷாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைக்குப் பின்னர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான், பாஸ்போர்ட்டை நாங்கள் முடக்கவில்லை. மாறாக, ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளோம். ஆயிஷா சில தகவல்களைக் கூறியுள்ளார். அது உண்மையா என்பதை அறிவதற்காக பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளோம்.

இந்த வழக்கில் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் அதை செய்வோம். அதேசமயம், வழக்கின் போக்கு, கிடைக்கும் ஆதாரங்கள் இவற்றின் அடிப்படையில்தான் அது அமையும்.

இந்த வழக்கின் விசாரணை எப்போது முடியும் என்று கூற முடியாது. காரணம், எத்தனை பேரிடம் விசாரிக்க வேண்டும் என்பதே இன்னும் தெளிவாகவில்லை. உத்தேசமாக ஹைதராபாத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 பேரிடம் சாட்சியம் பெற வேண்டியுள்ளது என்றார் கான்.

சோயப் மாலிக் குடும்பத்தினர் குழப்பம்

ஆயிஷா விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் எழுந்துள்ள புதிய சூழ்நிலையைத் தொடர்ந்த தங்களது இநதிய வருகையில் மாற்றம் செய்துள்ளனர் சோயப் மாலிக்கின் குடும்பத்தினர்.

இதுகுறித்து சோயப் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். அவர்களது இந்தியத் திட்டத்தில் மாற்றம் இருக்கும் என்றார்.

திருமணத்திற்காக நாளை சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் ஹைதராபாத் வருவதாக திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்ஜாமீன் மனு தாக்கல் இல்லை

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரும் திட்டத்தில் சோயப் மாலிக் இல்லை என்று அவரது வக்கீல் ரமேஷ் குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத் போலீஸாருடன் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார் சோயப். போலீஸாரும் நல்ல முறையில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். எனவே முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று சோயப் கூறியுள்ளார் என்றார் குப்தா.

ரமேஷ் குப்தா சீனியர் வக்கீல் ஆவார். ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியபோது அவருக்காக ஆஜரானவர் குப்தா என்பது நினைவிருக்கலாம். குப்தா டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X