எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை!
வரும் கல்வியாண்டு முதல் இந்த பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சாதாரண ஃபார்மல் ஆடைகளையும், மாணவிகள் சல்வார் அல்லது புடவை அணிய வேண்டும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜீன்ஸ், டிசர்ட், ஸ்கர்ட், மிடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, நகைகள், பெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதை பல்கலைக்கழக நிர்வாகம் தடை செய்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் இந்த சட்டதிட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும் என பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவிக்கையில், 'நான் இளைஞர்கள் விருப்ப ஆடை அணியக்கூடாது என நினைப்பவன் அல்ல.
மருத்துவம் சார்ந்த சூழலில் சில ஒழுக்க முறைகளை நாம் பின்பற்றியாக வேண்டும். பூக்கள், வாசனை பொருட்கள், விரல் நகங்கள் போன்றவை நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும் நோயாளிகளின் மனதை திசை திருப்பும் வகையில் மாணவிகள் ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில் மாணவிகள் டீசர்ட் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளோம்' என்றார்.
ஆனால், துணைவேந்தரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'மிக சொற்பமான விலையில் டி-சர்ட் கிடைக்கும். ஆனால், ஃபார்மல் செட் வாங்க நிறைய செலவாகும்.
அதோடு, டிசர்டை துவைத்து மீண்டும் அணிவது மிகவும் சுலபமானது. ஆனால் ஹாஸ்டல்களில் ஃபார்மல் ஆடைகளை தயார் செய்வது பெரிய வேலை. அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வருவது கஷ்டம்' எனக் கூறுகின்றனர்.