சவுதியில் பணியாற்றி வந்த ஆந்திர வாலிபரை 4 ஆண்டுகளாகக் காணவில்லை
ஜெட்டா: சவுதி அரேபியாவில் கடந்த 2006ம் ஆண்டு காணாமல் போனவர் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய தந்தை பெரும் கவலையில் மூழ்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகம்மது இக்பால். அங்குள்ள அரசு செய்தித் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய 35 வயது மகன் முகம்மது ஜாவித். இவர் 2002ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார்.
ஜாவித்தின் குடும்பத்தினர் கடப்பாவில் வசித்து வருகின்றனர். இவருடைய பாஸ்போர்ட் எண் ஏ-4758919 ஆகும்.
ஏசி டெக்னீஷியனாக சவுதிக்கு வந்த ஜாவித், அல் தவாத்மி என்ற நகரில் வேலை பார்த்து வந்தார். கடப்பாவில் உள்ள தனது மனைவி, தாயாருடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தார். ஆனால் 2006ம் ஆண்டு முதல் இவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை.
இதுகுறித்து சவுதி அரேபிய கேரள சங்கங்களின் கூட்டமைப்புக்கு இக்பால் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகனைக் காணவில்லை. கண்டுபிடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று கோரியிருந்தார்.
இதுகுறித்து சங்கத் தலைவர் முரளீதரன் கூறுகையில், ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு இந்த மனுவை அனுப்பி வைத்தோம். பின்னர் ஜாவித்தின் ஸ்பான்சரை தொடர்பு கொண்டபோது, ஜாவித் ஓடி விட்டதாகவும், அதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் தெரிவித்த்தாகவும் கூறினார் என்றார்.
ஜாவித் குறித்த புகார் வரப் பெற்ற இந்தியத் தூதரகம், அதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும் நடைமுறைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.