உள்துறை அனுமதி வழங்கினால் தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் சேவை: மத்திய கப்பல்துறை
தூத்துக்குடி: உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கினால் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என மத்திய கப்பல்துறை அமைச்சக இணை செயலாளர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார்.
தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் அனைத்திந்திய ஆட்சி மொழி கருத்தரங்கம் மற்றும் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தில் ஆட்சி மொழி இந்தி அமலாக்கத்தின் வெள்ளி விழா நடந்தது.
இந்த விழாவுக்கு துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராவ் தலைமை வகித்தார். விழாவில் கப்பல் துறை அமைச்சக இணை செயலாளர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவாவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், '2009 - 10ம் ஆண்டில் நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மூலம் 560 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது 5.86 சதவீத வளர்ச்சியாகும்.
2010-11ம் ஆண்டில் 600 டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் எந்தந்த துறைமுகங்களுக்கு என்னென்ன சரக்குகளை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து மத்திய கப்பல் அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
தூத்துக்குடி துறைமுக பகுதியின் தற்போதைய ஆழம் 12.8 மீட்டராகும். வரும் ஆண்டுகளில் மேலும் 14 மீட்டர் ஆழப்படுத்தப்படும். தூத்துக்குடி துறைமுகத்தில் 8வது கப்பல் தளத்தி்ல் சரக்கு பொட்டக முனையம் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து கொழும்பு நகருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மத்திய அரசு அனுமதி அளித்தால் தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவைக்கான திட்டம் துவக்கப்படும் என்று கூறினார்.