ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் பரபரப்பில் ஆழ்த்தியது சோயப் மாலிக் – ஆயிஷா சித்திக்கி விவகாரம். கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தை பரபரப்பாக வைத்திருந்த இந்தப் பிரச்சினைக்கு இப்போது ஒரு வழியாக தீர்வு காணப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து ஆயிஷா குடும்பத்துக்கு நெருக்கமானவரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், இது உண்மைதான். சோயப் மற்றும் ஆயிஷா குடும்பத்தினருக்கு இடைய சமரசம் எட்டப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான பத்திரத்தில், சோயப் மாலிக் கையெழுத்துப் போட்டுள்ளார். விவாகரத்து நடந்து முடிந்து விட்டது.
இதன் எதிரொலியாக சோயப் மாலிக் மீது கொடுத்த புகாரை ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.
இரு குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பரான முஸ்தபா கான் என்பவர் கூறுகையில், சோயப்புக்கு எதிராக கொடுத்த புகாரை ஆயிஷா குடும்பத்தினர் விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.
இஸ்லாமிய சமூகப் பெரியவர்கள் பலர் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை தொடங்கிய இந்த சமரசப் பேச்சுவார்த்தை இன்று காலையில்தான் முடிவுக்கு வந்த்தாம்.
இந்த சமரசத்தைத் தொடர்ந்து ஆயிஷாவால் ஏற்பட்ட பிரச்சினை சரியாகி, ஏப்ரல் 15ம் தேதி சானியா மிர்ஸாவை மணக்க சோயப்புக்கு ஏற்பட்ட தடை நீங்கியுள்ளது.
என்ன உடன்பாடு?
ஆயிஷா குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப் மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.
இந்த உடன்பாடு குறித்து ஆயிஷா வீட்டில் வைத்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறிய சானியா மிர்ஸாவின் தாய்மாமா ஷபி என்பவர் கூறுகையில், சோயப்புக்கு திரான அனைத்து வழக்குகளையும் ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். இதுதொடர்பாக போலீஸில் மனுவும் தரப்பட்டு விட்டது என்றார்.
பேட்டியின்போது ஆயிஷாவின் தாயார் பரீசா, ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபித் ரசூல் கான், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.
ஷபியும், கானும் பேசுகையில், இரவு முழுக்க சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த விவகாரத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைக்க வேண்டும் என்று இரு குடும்பத்தினருக்கும் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு இரு குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டு சமரசத்தற்கு முன்வந்தனர் என்றனர்
ஆயிஷாவின் தாயார் பரீசா கூறுகையில், சமூகப் பெரியவர்கள் முடிவுப்படி அனைத்தும் முடிந்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உடன்பாட்டை எட்டுமாறு சமூகப் பெரியவர்கள் சோயப்பை வலியுறுத்தினார்கள். அவரும் ஒப்புக் கொண்டார்.
எனது மகள் நிறையக் கஷ்டப்பட்டு விட்டாள். இறுதியாக அவளுக்கு நீதி கிடைத்து விட்டது. இந்தத் தீர்வால் அவளும் மகிழ்ச்சி அடைந்துள்ளாள் என்றார்.
அனைத்துமே பொய்!
ஆயிஷா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே திட்டவட்டமாக மறுத்து வந்தார் சோயப் மாலிக். சானியா மிர்ஸா தரப்பிலும் கூட சோயப்புக்கு ஆதரவாகவே பேசி வந்தனர்.
ஆனால் இன்று தடாலடியாக ஆயிஷாவை விவாகரத்து செய்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார் சோயப். இதன் மூலம் இதுநாள் வரை அவர் சொல்லி வந்த அனைத்துமே பொய் என்பது தெளிவாகியுள்ளது.