இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – பலத்த பாதுகாப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்த்து.
அதிபர் தேர்தலில் பொன்சேகாவுக்கு தமிழர் பகுதிகளில் பெரும் ஆதரவு காணப்பட்டது. இந்த முறையும் பொன்சேகா கட்சியினர் தமிழர் பகுதிகளில் வாக்குகளை அதிக அளவில் பெற முயன்று வருகின்றனர்.
ஆனால் தமிழர் கட்சிகளோ பிளவு பட்டு நிற்கின்றன. எதிர்க்கட்சி கூட்டணியும் இம்முறை பலமாக இல்லை. எனவே ராஜபக்சே கட்சியினர் நடுவில் புகுந்து அதிக அளவிலான சீட்களைக் கைப்பற்றி விட முயன்று வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் கை கோர்த்திருந்த பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கேவும் இம்முறை தனித் தனி கூட்டணிகளாக உள்ளனர். ராஜபக்சே கட்சி ஒரு கூட்டணி என மும்முனைப் போட்டி காணப்படுகிறது. மொத்தம் 7600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9ம் தேதியும் அங்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.