சட்டிஸ்கர் நக்சல் தாக்குதல்: பலியான வீரர்களில் 3 பேர் தமிழர்கள்
சென்னை: நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 76 சிஆர்பிஎப் போலீசாரில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த மோகனரங்கன், குமரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் ஆகிய மூவரும் பலியானவர்களில் அடக்கம்.
மோகனரங்கன் (44). சென்னை கொளத்தூரை சேர்ந்தவர். கொளத்தூர் பூம்புகார்நகரில் இவரது குடும்பம் வசித்து வருகிறது. இவரது மனைவி பெயர் சுஜாதா. அனுஷா என்ற மகள் இருக்கிறாள். அனுஷா 9வது வகுப்பு படிக்கிறார்.
மோகனரங்கன் இறந்த தகவல் நேற்று மாலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அனைவரும் கதறி அழுதார்கள்.
அடுத்து குமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த விஜயகுமாரின் (36) குடும்பம் அனந்தமங்கலத்தில் உள்ளது. விஜயகுமாருக்கு ராதா (33) என்ற மனைவியும், சவுமியா (9) என்ற மகளும் உள்ளனர்.
பலியான இன்னொரு போலீஸ்காரர் சேகர் (36) வேலூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
மூன்று போலீஸ்காரர்களின் உடலும் விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணியளவில் சென்னை கொண்டு வரப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மோகனரங்கன் உடல் கொளத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.