சானியா திருமணம்: சோயப் குடும்பத்தார் ஹைதராபாத் வந்தனர்!
ஹைதராபாத்: சானியாவை திருமணம் செய்ய உள்ள சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் திருமணம் ஹைதராபாத்தில் வரும் 15-ம் தேதி நடக்கிறது.
சோயப் மாலிக்கின் முதல் மனைவி ஆயிஷா, தன்னை விவாகரத்து செய்யாமல் சானியாவை திருமணம் செய்யக்கூடாது என்று போர்க்கொடி தூக்கினார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாலிக் மீது மோசடி, வரதட்தணை கொடுமை உள்பட பல்வேறு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். இதனால் திருமணம் திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதிர்ச்சியில் உறைந்த சோயப் மாலிக் ஆயிஷாவை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்தார். இதன் மூலம் சானியா திருமணத்தில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து சோயப் மாலிக்கின் குடும்பத்தார் நேற்று சானியா வீட்டுக்கு வந்தனர்.
சோயப் மாலிக்கின் தாயர் சுல்தானா ஃபரூக், சகோதரர் அதுல்மாலிக், சகோதரிகள் ஷாஸியா, சதாஃப் இம்ரான் ஆகியோர் சானியாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
திட்டமிட்டபடி திருமணம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடக்க உள்ளது.
திருமண வைபவத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.