மாணவர்களுக்கு லேப்டாப் அவசியம் – கடன் தர வங்கிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: இன்றைய கல்வி சூழ்நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் மிகவும் அத்தியாவசியமானது. எனவே கல்விக் கடன் வழங்கும்போது அதற்கான தொகையை கழிக்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த மகேந்திரன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படிக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த இவர், முதலாண்டு ரூ.1.63 லட்சமும், இரண்டாமாண்டு ரூ.1.33 லட்சமும் கட்ட வேண்டியிருந்தது.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் தந்தை கூலித் தொழிலாளி. எனவே வங்கியில் கல்விக் கடன் பெற்று கல்லூரி கட்டணத்தை செலுத்த திட்டமிட்டிருந்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவில் உள்ள நரிக்குடியில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் கடந்த 28ம் தேதி அக்டோபர் மாதம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார்.
இவரின் விண்ணப்பத்தில் ஆர்வம் காட்டாத அதிகாரிகள், மிகுந்த வற்புறுத்தலுக்கு பின்னர் பரிசீலித்தனர்.
அதன் பின் கல்லூரி கட்டணத்துக்கு முதலாண்டு ரூ.45 ஆயிரமும், 2ம் ஆண்டு ரூ.24 ஆயிரமும், அத்துடன் புத்தகங்கள் உள்ளிட்டவைக்கான தொகையும் சேர்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.1.4 லட்சம் மட்டுமே தரமுடியும் எனக் கூறிவிட்டது.
இதனால், மாணவர் மகேந்திரன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டார். மகேந்திரனின் மனுவை நீதிபதி பி.ஜோதிமணி விசாரித்தார்.
கல்விக் கடன்களுக்கான தொகையை நிர்ணயிப்பதற்கு அரசு தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்த அம்சங்களின் அடிப்படையில் தான் மாணவருக்கு வழங்கப்படும் தொகை தீர்மானிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் கூறப்பட்டது.
கல்லூரிகளில் வழங்கப்படும் லேப்டாப் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு எல்லாம் வங்கி கடன் தர இயலாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய கல்வி சூழ்நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் என்பது அத்தியாவதியமான ஒரு உபகரணம்.
லேப்டாப் கம்ப்யூட்டரை ஆடம்பர பொருள் என கருதக்கூடாது. எனவே கல்லூரியில் மாணவர் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த தொகையான ரூ.2.9 லட்சத்தையும் கடனாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.