தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - வரதராஜன் குற்றச்சாட்டு
திண்டுக்கல்: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வரதராஜன் கலந்து கொண்டு பேசுகையில், 'விலைவாசி உயர்வு, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை கண்டித்து, மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாக, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும், குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்த பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் கொலையான சம்பவமே இதற்கு ஒரு உதாரணமாக குறிபிப்பிடலாம்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி, காலாவதியான மருந்துகள் விற்பனை இந்த நிமிடம் வரை நீடித்த வண்ணம் உள்ளது.
இந்த பிரச்னையில் உண்மையான குற்றவாளிகள் குறித்து வெளிப்படையான விசாரணையை அரசு நடத்த முன் வர வேண்டும்.
இதற்கு துணையாக செயல்பட்டவர்கள் மீது பாராபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.