தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று - ரூ.10 மதிப்பிலான படகுகள் சேதம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சூறைக்காற்றினால் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 300 படகுகள் சேதம் அடைந்தன.
கொளுத்தும் வெயிலுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் லேசாக மழை பெய்தது.
அப்போது திடீரென காற்று வீசத் தொடங்கியது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறைக்காற்று தூத்துக்குடியை புரட்டிப்போட்டது.
பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. தூத்துக்குடி கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன.
திரேஸ்புரம், தருவைகுளம், வெள்ளப்பட்டி, வேம்பார் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன.
சேதமான படகுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
தருவைகுளம் பகுதியில் உப்பளங்களில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல மின் மோட்டார்கள் பழுதடைந்தன.
திரேஸ்புரம் பகுதியில் 10 வீடுகளில் மேற்கூரை காற்றில் பிய்த்து எடுக்கப்பட்டு பறந்தது. வாழை மரங்களும் அடியோடு சாய்ந்தன.
தூத்துக்குடியை அடுத்த குலையன்கரிசல், கூட்டாம்புளி, புதுக்கோட்டை, கோவங்காடு, ஆறுமுகமங்கலம், அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் வாழை மரங்கள் வீணாயின.
மாவட்டத்தின் பிறபகுதிகளான ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் இந்த சூறைக்காற்றில் சிக்கின.
நேற்று மாலை திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. சூறைக்காற்றினால் அவர்கள் தொடர்ந்து கடலில் பயணம் செய்ய முடியாமல் அருகிலுள்ள காசுவாரி தீவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது
மின்னலுக்குப் பெண் பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெய்த பலத்த மழையின் போது கட்டிட பணிகளில் ஈடுபட்டிருந்த அழகம்மாள் (36) என்ற பெண் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.