100 ராஜ்யசபா எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் - எம்.ஏ.எம். ராமசாமிக்கு 2வது இடம்
ராஜ்யசபா உறுப்பினர்களில் 100 பேருக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
ராஜ்யசபா எம்.பிக்களிலேயே மிகப் பெரிய கோடீஸ்வர்ர் ராகுல் பஜாஜ்தான். இவரது அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 300 கோடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது இடம் கர்நாடகத்திலிருந்து மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்குக் கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ. 278 கோடியாகும்.
ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்..பி சுப்பராமி ரெட்டிக்கு ரூ. 272 கோடி சொத்து உள்ளதாம்.
அமிதாப்பச்சனின் மனைவியும், சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்நதவருமான ஜெயா பச்சனுக்கு ரூ. 215 கோடி சொத்து உள்ளதாம். சமாஜ்வாடியிலிருந்து சமீபத்தில் துரத்தப்பட்ட அமர்சிங்குக்கு ரூ. 79 கோடி சொத்து உள்ளதாம்.
தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த கழகம் ஆகியவை இணைந்து இந்த புள்ளி விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிட்டுள்ளன.
ராஜ்ய.சபா எம்.பிக்களில் 37 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
கிரிமினல் வழக்குப் பின்னணியைக் கொண்ட எம்.பிக்களை அதிகம் கொண்டிருப்பது காங்கிரஸ்தான். அங்கு 7 எம்.பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளனாம். பாஜகவின் கணக்கு 6 ஆகும். பகுஜன் சமாஜ் மற்றும சிவசேனாவிடம் தலா 4 குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள் உள்ளனர்.
டி.ராஜாவுக்கு சொத்தே இல்லை
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க சிபிஎம் எம்.பி. சமன் பதக் ஆகியோர் தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் தனக்கு ரூ. 1.74 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். புரட்சிகர சோசலிச கட்சியின் அபானி ராய் ரூ. 72,000 மட்டுமே தனது சொத்து என்று தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வர காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில்தான் கோடீஸ்வர எம்.பிக்கள் அதிகம். அக்கட்சியில் மொத்தம் 33 ராஜ்யசபா எம்.பிக்கள் கோடீஸவரர்கள் ஆவர். அடுத்த இடம் பாஜகவுக்கு. அங்கு 21 கோடீஸ்வர எம்.பிக்கள் உள்ளனர். சமாஜ்வாடிக் கட்சியில் 7 எம்.பிக்கள் கோடீஸ்வரர்களாம்.
சொத்து உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்த 219 ராஜ்யசபா எம்.பிக்களில் 179 பேர் பட்டதாரிகள் ஆவர். 18 பேர் பிளஸ்டூ வரை படித்தவர்கள். 11 பேர் பத்தாவது வகுப்பை முடித்தவர்கள். 2 பேர் எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் ஆவர்.
இந்த புள்ளி விவரம் குறித்து முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினரும், தேசிய தேர்தல் கண்காணிப்பக உறுப்பினருமான எல்.சி.ஜெயின் கூறுகையில், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் மேல்சபையில் இடம் பெற்றிருப்பது அந்த சபையின் கண்ணியத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது என்றார்.