கூட்டத்தைக் கண்காணிக்க சானியா வீட்டில் சிசிடிவி பொருத்தம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சானியா மிர்சாவின் வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சோயப் மாலிக் மற்றும் அவரின் முதல் மனைவி ஆயிஷா தொடர்பான சர்ச்சைகளுக்காக தினந்தோறும் தனது வீட்டின் முன்பு குவிந்துவிடும் பத்திரிகை நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்களை சமாளிக்கவே இந்த ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வீட்டின் முதல் மாடியில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமரா மூலமாக, வீட்டின் முகப்பு பகுதி முழுவதும் காட்சிளாக மாலிக் மற்றும் சானியாவின் கணினி திரையில் விரிகிறது.
யார் யார் வீட்டுக்கு வருகிறார்கள், யாரை ஓடிச் சென்று வரவேற்கலாம், யாரை இல்லை என்று சொல்லி அனுப்பிவிடலாம் என்பதை எல்லாம் வீட்டின் உள்ளே இருந்தபடியே சானியாவும், மாலிக்கும் தீர்மானிக்க இந்த சிசிடிவி மிகவும் உபயோகமாக இருக்கிறதாம்.
அதோடு சானியாவையும், மாலிக்கையும் தேடி வரும் உள்ளூர் ரிப்போர்டர்கள் வீட்டு வாசலில் காத்துக்கிடப்பதையும் இவர்கள் உள்ளே இருந்தபடி கவனித்து வருகிறார்கள்.
ஒரு சமயம் கிளி ஜோதிடக்காரர் ஒருவர் சானியாவின் வீட்டருகே மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து சில ரிப்போர்ட்டர்கள், அவரை சூழந்து கொண்டனர்.
சானியாவும், மாலிக்கும் கிளி ஜோதிடம் பார்ப்பதற்காக அவரை வரவழைத்ததாக யாரோ கிளப்பிவிட்ட தகவலால் ரிப்போர்ட்டர்களிடம் அந்த கிளி ஜோதிடர் மாட்டிக் கொண்டார்.
ரிப்போர்ட்டர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஒன்றும் புரியாமல் விழித்தாரம் கிளி ஜோதிடர். இதையெல்லாம் தங்களின் அறையில் இருந்து சிசிடிவி மூலம் பார்த்து பார்த்து சிரித்தார்களாம் சானியாவும், மாலிக்கும்.
சிசிடிவி பயன்படுத்துவதற்கு காவல் துறை அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், இதுபற்றி ஹைதராபாத் போலீஸ் டெபுடி கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திராவிடம் கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், 'சிசிடிவி பொருத்துவதற்கு அவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முன்னதாக, எதற்காக அவர்கள் சிசிடிவி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்' என்றார்.
இதற்கிடையே, சானியா - மாலிக்கின் திருமண வரவேற்பு சோயப்பின் சொந்த ஊரான சியால்கோட்டில் நடப்பதற்கு பதிலாக லாகூரில் வரும் 16 அல்லது 17ம் தேதி நடக்கும் என பேசப்படுகிறது.
--