மேலவை கலைக்கப்பட நடிகைதான் காரணம்-பாமக
சென்னை: தமிழகத்தில் முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கு ஒரு நடிகை தான் காரணம் என்று பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கூறியதால் சட்டசபையில் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மீண்டும் மேலவையைக் கொண்டு வருவது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று தாக்கலான தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது அதை ஆதரித்துப் பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கு ஒரு நடிகையும் காரணம் ஆவார் என்றார்.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கற்பனையான விஷயங்களை இங்கு பேசக் கூடாது என்று குரல் தந்தனர்.
இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, பத்திரிக்கைகளில் வந்ததை வைத்துதான் சொன்னேன் என்றார்.
இதனால் ஜி.கே.மணிக்கும் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மணிக்கு ஆதரவாக பாமக எம்எல்ஏக்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்எல்ஏக்கள் சேகர்பாபு, ரவிச்சந்திரன், செ.ம.வேலுச்சாமி ஆகியோருக்கும் வேல்முருகன் உள்ளிட்ட பாமக எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்.
கூட்டணிக்கு அதிமுக அலைவது ஏன்?:
முன்னதாக தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் குறுக்கிட்டு அவருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர்.
அப்போது பீட்டர் அல்போன்ஸ், எனக்கும் பேசத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்லித் தர வேண்டாம். இதனால்தான் நீங்கள் டெபாசிட் இழந்தீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், காங்கிரஸ் எத்தனை தடவை டெபாசிட் இழந்துள்ளது. உங்களால் தேர்தலில் தனித்து நிற்க முடிகிறதா? யார் முதுகிலாவது ஏறித்தானே பவனி வருகிறீர்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம், காங்கிரஸ் டெபாசிட் இழந்ததாக கூறுகிறீர்களே. அப்படியானால் ஏன் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள துடிக்கிறீர்கள் என்றார்.
இதனால் அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.