மதுரை அருகே இரட்டைக் கொலை- 2 நாட்களாக வீட்டில் கிடந்த பிணங்கள் மீட்பு
மதுரை: மதுரை அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு பேர் வீட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களை போலீஸார் இன்று மீட்டனர்.
கொல்லப்பட்ட இருவரும் கணவன், மனைவி ஆவர். மதுரை, அவனியாபுரம் அருகில் உள்ளது குசவண்குண்டு. இங்குள்ள போக்குவரத்து நகரில் ஸ்ரீராமன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி கீதா.
ராமன் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டிக் கிடந்த்து. கணவன், மனைவி இருவரின் நடமாட்டமும் இல்லை. இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து துர் நாற்றம் வரவே அக்கம் பக்கத்தில் வசிப்போர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது கீதாவும், ராமனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இருவரது உடல்களிலும் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. இவர்களை மர்மக் கும்பல் கொலை செய்து விட்டு வீட்டில் உள்ள நகை, பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவன், மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.