தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்- பாக்.கிடம் ஒபாமா கண்டிப்பு
அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் கிலானி, அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ஒபாமா பேசுகையில், மும்பைத் தீவிரவாத்த் தாக்குதலுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலமாகத்தான் தெற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை சீர்படும் என்று கிலானியை வலியுறுத்தினார் ஒபாமா.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போன்ற சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடனும் செய்து கொள்வது குறித்து ஒபாமா பேசவே இல்லையாம்.
பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. அதேசமயம், மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நேர்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெளிவாகக் கூறினாராம் ஒபாமா.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் கிலானியை ஒபாமா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.