பாஸ்போர்ட் திருப்பித் தரப்படாமலேயே சோயப் கல்யாணம் நடந்த்தா?
இஸ்லாமாபாத்: பறிமுதல் செய்யப்பட்ட சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் இன்னும் திருப்பித் தரப்படாத நிலையில், அவருக்கும், சானியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெரும் இழுபறிக்குப் பின்னர் சானியா, சோயப் திருமணம் இன்று நடந்து முடிந்த்து. இடையில் ஆயிஷா சித்திக்கியால் ஏற்பட்ட சிக்கலால் சோயப் கைதாக்க கூடிய நிலைமை உருவானது.
ஆயிஷா கொடுத்த புகாரின் பேரில் சோயப்பை போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதுவரை பாஸ்போர்ட் திருப்பித் தரப்படவில்லை.
இநத நிலையில், சோயப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்பத் தர வேண்டும் என பாகிஸ்தானிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை தொடர்பு கொண்டார். சோயிப் மாலிக் பாஸ் போர்ட்டை உடனே திரும்ப பெறுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஷாகித் மாலிக், டெல்லியில் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். சோயிப் மாலிக் பாஸ் போர்ட்டை உடனடியாக திரும்ப தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பாஸ்போர்ட் இல்லாமல் திருமணத்தை நடத்த முடியாது என்று ஹைதராபாத் காஜி அஸ்மதுல்லா ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று சோயப்பின் திருமணம் அதி வேகமாக நடந்து முடிந்துள்ளது.
எனவே அவரிடம் பாஸ்போர்ட் திருப்பித் தரப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கோர்ட்டில் ஆஜராகித்தான் பாஸ்போர்ட்டை பெற வேண்டும் என்பதால் அவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால், பாஸ்போர்ட்டை அவர் எப்படிப் பெற்றார் என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
ஒருவேளை பாஸ்போர்ட் பெறப்படாத நிலையிலேயே திருமணம் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.