சர்தாரிக்கு எதிரான வழக்கு - விசாரிக்க ஸ்விட்சர்லாந்து மறுப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க முடியாது என சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் அவரின் கணவரும் தற்போதைய அதிபருமான ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் விதிமுறைகளை மீறி சொத்து சேர்த்ததாக கடந்த 2003ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது.
அப்போதைய நவாஸ் ஷெரிப் அரசு அளித்த புகாரின் பேரில் ஜெனிவா கோர்ட்டில் பூட்டோ மற்றும் ஆசிப் அலிக்கு எதிராக தீர்ப்பானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் பெனாசீர் மற்றும் சர்தாரிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபராக முஷாரப் வந்ததை அடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டதால் பெனசிர் மீதும், சர்தாரி மீதான ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்யும் முயற்சியில் ஆவர் இறங்கினார்.
ஜெனிவாவில் பாகிஸ்தான் அரசு தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, கடந்த 2008ம் ஆண்டில் சர்தாரிக்கு எதிரான வழக்கை மூடிவிட்டதாக ஸ்விஸ் அரசு அறிவித்தது.
முஷாரப் இதுதொடர்பாக அவசர சட்டம் ஒன்றை அப்போது கொண்டு வந்தார். ஆனால் அந்த சட்டம் முறைப்படி நாடாளுமற்ற ஒப்புதல் பெறாததால் காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில், சர்தாரி உள்ளிட்டர்வகள் மீதான அனைத்து ஊழல் வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஸ்விட்சர்லாந்து அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், சர்தாரிக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஸ்விட்சர்லாந்து மறுத்துவிட்டது.
கடந்த சனிக்கிழமை அன்று இஸ்லாமாபாத் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஸ்விட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் டேனியல் ஸாப்பள்ளி இதுபற்றி குறிப்பிடுகையில்,
'எந்த ஒரு நாட்டின் அதிபர், பிரதமர் அல்லது வெளியுறதுத் துறை அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது இயலாது. அவர்கள் அரசியல் சாசன அந்தஸ்த்தில் இருப்பவர்கள்.
பாகிஸ்தான் அரசிடம் இருந்து இதுதொடர்பாக கடிதம் கிடைக்கப்பெற்றோம். ஆனால் ஸ்விஸ் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் அதில் இல்லை' எனக் கூறினார்.