இந்தியா - மலேசியா இடையே கூடுதலாக 6 விமானங்கள் இயக்க ஏர்ஏசியா முடிவு
கோலாலம்பூர்: இந்தியா - மலேசியா இடையே மேலும் ஆறு விமானங்களை இயக்க ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
ஏர் ஏசியா குழும தலைவர் டோனி ஃபெர்னாண்டஸ் இதுபற்றி கூறியிருப்பதாவது:
ஏர்ஏசியா சேவையை துவக்கும் போது இரண்டு விமானங்களை மட்டுமே கொண்டிருந்தோம். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 92 விமானங்களுடன் இயங்கி வருகிறோம்.
மேலும் 120 விமானங்களை வாங்கியுள்ளோம். இவை வரும் 2015ம் ஆண்டுக்குள் சேவையை துவக்கிவிடும்.
கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு எங்கள் சேவை இருந்துவருகிறது. திருச்சி, திருவனந்தபுரம், கோல்கத்தா, கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன.
மலேசியா - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மேலும் ஆறு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.
பெனாங்கில் இருந்து கோல்கத்தாவுக்கு வரும் ஏப்ரல் 28ம் தேதியும், கோலாலம்பூர் - மும்பை இடையே மே 6ம் தேதியும் புதிய சேவைகள் தொடங்குகின்றன.
இதைத்தொடர்ந்து கோலாலம்பூரில் இருந்து சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டிலேயே ஆறு புதிய சேவைகளும் துவக்கப்பட்டு விடும். இதற்கு அடுத்தபடியாக எங்களின் இலக்கு அமிர்தசரஸ்' என்றார்.