கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மருத்துவமனையில் திடீர் அனுமதி
பெங்களூர்: சர்ச்சைக்குள்ளான கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், திடீரென பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய பி.டி.தினகரனை நீண்ட விடுப்பில் போகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து அவரை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது உச்சநீதிமன்றம்.
ஆனால் தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிக்கிம் உயர்நீதிமன்ற வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், நேற்று திடீரென தலைமை நீதிபதி பி.டி.தினகரன் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன பிரச்சினை என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
சிக்கிம் முதல்வரிடம் வக்கீல்கள் புகார்
இதற்கிடையே, தினகரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சிக்கிம் மாநில வக்கீல்கள், சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிக்கிம் வக்கீல்கள் சங்கத் தலைவர் தாபா கூறுகையில்,
தினகரன் நியமனம் குறித்து, எங்கள் வக்கீல் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டது. அப்போது அவரது நியமனத்தை ஏற்க முடியாது என, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை, முதல்வர் பவன் குமார் சாம்லிங்கை சந்தித்து, மனுவாக கொடுத்துள்ளோம்.
நீதிபதி தினகரனை சிக்கிம் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் எங்கள் போராட்டத்துக்கு ஒத்துழைக்கும் படி அவரிடம் கோரியுள்ளோம். குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஓரிரு நாளில் சிக்கிம் வரவுள்ளார். அப்போது, அவரையும் சந்தித்து, எங்கள் தரப்பு கருத்தை வலியுறுத்தவுள்ளோம்.
நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஒருவரை, நீதிபதியாக நியமித்தால், சிக்கிம் மாநில நீதிமன்றங்களின் நேர்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை அவரிடம் விளக்க உள்ளோம். எங்கள் தீர்மான நகல்களை, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கம்
இதற்கிடையே கேரளாவில் ஒரு விழாவுக்கு வந்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்து விளக்குகையில், 'நீதிபதி தினகரனை, சிக்கிம் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இட மாற்றம் செய்யும் பரிந்துரையை மட்டுமே நாங்கள் அளித்துள் ளோம். இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர்தான், இறுதி முடிவு எடுப்பார்' என்றார்.