இலங்கை வீரர்களுக்கு இந்திய கடற்படை சிறப்பு பயிற்சி!
கொழும்பு: இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய கடற்படை கப்பல் திரிகோணமலை துறைமுகம் சென்றடைந்துள்ளது.
இந்திய கடற்படை கப்பலான 'ஐஎன்எஸ் மகர்' என்ற இந்த கப்பலுக்கு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று இலங்கை கடற்படை வீரர்கள் திரிகோணமலையில் சம்பிரதாய வழக்கப்படி வரவேற்பு அளித்தனர்.
கடல் பகுதியில் பேரழிவுகளை எதிர்கொள்வது, பேரிடர் தடுப்பு முறைகள், கடலில் துப்பாக்கிச் சூடு, கடலில் தொலைத்தொடர்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நடைமுறை விளக்கம் இலங்கை கடற்படையினருக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் 100க்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், மாலுமிகள் பயிற்சிக்காக இந்திய கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே, இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களை இலங்கை விடுவித்துள்ள நிலையில், அந்நாட்டு மீனவர்கள் 6 பேரை இந்தியாவும் விடுவித்துவிட்டது. இலங்கை கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.