ஈரான் மீத மேலும் பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா எதிர்ப்பு
ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் தடைகளை விதிக்கக் கூடாது என்று ஒபாமாவை மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரும், ஒபாமாவும் சந்தித்துப் பேசியபோது ஈரான் மீதான தடை குறித்து பேசப்பட்டது. அப்போது ஈரான் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பைப் பேணுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறுகையில், ஈரான் மீது ஐ.நா. மூலம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்த பிரதமருடன் அதிபர் ஒபாமா ஆலோசித்தார். ஆனால் அதற்கு இந்தியாவின் ஆட்சேபனையை பிரதமர் தெரிவித்தார்.
இந்தத் தடைகளால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், இது ஆக்கப்பூர்வமானதாக அமையாது என்பதையும் அவர் தெரிவித்தார்.
அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடுவதில் இந்தியாவுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார் என்றார் ராவ்.