அம்பேத்கர் சிலைக்கு மாலை: ராகுல்காந்தி, மாயாவதி போட்டாபோட்டி!
இன்று அம்பேத்கர் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சொந்த தொகுதியான அம்பேத்கர் நகரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இன்று காலை முதலே அம்பேத்கர் நகரில் உள்ள பிரபலமான அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளை பகுஜன் சமாஜ் கட்சியினர் செய்யத் தொடங்கிவிட்டனர்.
வரும் 2012ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸை பலப்படுத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வியூகம் வகுத்து வருகிறார்.
அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தலித் மக்களை கவருவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியினரும், காங்கிரசாரும் போட்டி போட்டு முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடத்துக்காக அம்பேத்கர் சிலையை பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டதாக காங்கிரசார் குற்றம்சுமத்துகின்றனர்.
இன்று காலை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியினர் அனுமதிக்க முடியாது என மாயாவதி கட்சியினர் கூறியதாக அம்பேத்கர் நகர் காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இதுபற்றி மாவட்ட கலெக்டர் குறிப்பிடுகையில், 'காங்கிரசாருக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 4 மணி வரை பகுஜன் சமாஜ் கட்சியின் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதே நேரத்தில், காலை 10 மணியில் இருந்து பகல் 2 மணி வரை காங்கிரசார் நிகழ்ச்சி நடத்துவதாக கூறினர்.
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளும் அந்த இடத்தில் சேர்ந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் தான், மாயாவதி புறப்பட்டு சென்ற பின்னர் நிகழ்ச்சிகளை நடத்துமாறு கூறினோம்' என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்து விட்டார்.
அதோடு காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவை ஒட்டி அம்பேத்கர் நகரில் இருந்து யாத்திரையை இன்று துவக்குகிறார் ராகுல். அந்த நிகழ்ச்சியோடு சேர்த்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் பகுஜன் சமாஜ் கட்டியினர் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தியதால், மெகா சைஸ் உருவப்படம் ஒன்றை காங்கிரசார் தயார் செய்துள்ளனர்.