டெல்லி மார்க்கெட்டில் மேலும் 2 இடங்களில் அபாய கதிர்வீச்சு!
டெல்லி: டெல்லி பழைய இரும்பு மார்க்கெட் பகுதியில் மேலும் இரண்டு இடங்களில் கோபால்ட் தனிம கதிர்வீச்சு உண்டாவது கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் பரபரப்படைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மாயாபுரி பழைய இரும்பு மார்க்கெட் பகுதியில் அபாயகரமான கதிர்வீச்சு உண்டாவதாக கடந்த வாரம் கூறப்பட்டது.
இதையடுத்து இந்திய அணுசக்தித் துறை நிபுணர்கள் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து, கோபால்ட்60 எனப்படும் தனிமத்தின் கதிர்வீச்சு உண்டாவதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் மேலும் இரு கதிர்வீச்சு பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கதிர்வீச்சுகளும் கோபால்ட்60 மூலமாகவே ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பழைய இரும்பு பொருள்களின் எஞ்சியத் துகள்களில் இருந்து கதிர்வீச்சு உண்டாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கதிர்வீச்சு காரணமாக இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் இதர தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வேறு இடங்களில் கதிர்வீச்சு ஏற்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.