நளினி மேல்முறையீட்டு மனு - விசாரணை ஒத்திவைப்பு!
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் நளினி, சிறை தண்டனையில் இருந்து முன்கூட்டியே விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி கடந்த 19 வருடங்களாக சிறை வாழ்க்கை அனுபவித்து வருகிறார்.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவர் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நளினியிடம் விசாரணை நடத்திய வேலூர் கலெக்டர் தலைமையிலான சிறை ஆலோசனைக் குழு தனது பரிந்துரையை தமிழக அரசுக்கு அளித்த்து.
அதைப் பரிசீலித்த தமிழக அரசு, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில்லை என்ற முடிவை எடுத்து உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம், நளினிக்குப் பொது மன்னிப்பு வழங்க இயலாது என்று கூறி அவரது மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நளினி சார்பில் மீண்டும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ரத்து செய்து உத்தரவிடுமாறும், தன்னை விடுதலை செய்யுமாறும் நளினி கோரினார்.
இம்மனு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு விசாரித்த நீதிபதி, நளினி வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
பின்னர் வழக்கை திங்கள்கிழமை வரை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.