ராமலிங்கராஜுவுக்கு மஞ்சள் காமாலை – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஹைதராபாத்: சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு மஞ்சள் காமாலை (ஹெபாடிடிஸ் பி) ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜுவின் ரத்தத்தில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அவரது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 3100லருந்து 2300 கியூபிக் மில்லிமீட்டர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளதாம். வழக்கமாக இது 6000 முதல் 12,000 கியூபிக் மில்லிமீட்டராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை வட்டாரங்கள் இதுகுறித்துக் கூறுகையில், 36 வாரங்களுக்கு ராஜுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வாரம் ஒரு ஊசியும் போடப்பட வேண்டும் என்றனர்.
ஆனால் இந்த மருந்துகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாம். மூளை, வயிறு மற்றும் நுரையீரல் ரத்தக் கசிவை ஏற்படுத்த் கூடிய அபாயத்தைக் கொண்டவை என்றும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த ஊசி போடப்பட்டவுடன்தான் ராஜுவின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்புகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவருக்கு ஹெபாடிடிஸ் சி ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஹெபாடிடிஸ் பி ஏற்பட்டுள்ளது.