சியால்கோட் வர சானியாவுக்கு விசா தர பாக் மறுப்பு- லாகூரில் வரவேற்பு
சானியா மிர்ஸாவுக்கும், சோயப் மாலிக்குக்கும் ஹைதராபாத்தில் 12ம் தேதி திருமணம் நடந்தது. இன்று இரவு ஹைதராபாத்தில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை முடித்துக் கொண்டு சானியா – சோயப் ஜோடி பாகிஸ்தான் கிளம்புகிறது.
சோயப்பின் சொந்த ஊர் சியால்கோட் ஆகும். எனவே அங்கேயே வரவேற்பை நடத்த சோயப் குடும்பத்தினர் திட்டமிட்டனர். ஆனால் சானியாவுக்கு சியோல்காட் வர பாகிஸ்தான் தூதரகம் விசா மறுத்து விட்டது.
லாகூர் மற்றும் கராச்சி வருவதற்கு மட்டுமே சானியாவுக்கு விசா கொடுத்துள்ளனர். இதையடுத்து லாகூருக்கு திருமண வரவேற்பை சோயப் குடும்பத்தினர் மாற்றியுள்ளனர்.
லாகூரில் உள்ள பிரபல பியர்ல் கான்டினென்டல் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிக்க ஏற்பாடு செய்துள்ளது.
விருந்துக்கு 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். விருந்துக்காக அசைவம் மற்றும் சைவம் என இரு பிரிவில் ஆர்டர் கொடுத்தனராம் சோயப் குடும்பத்தினர். ஆனால் அதை ஏற்க ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
திருமணம், வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளின்போது ஏதாவது ஒரு வகை உணவு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவாம். இதைக் காரணம் காட்டி சைவம் அல்லது அசைவம் மட்டுமே ஏற்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளதாம்.
ஒரு வேளை மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றால் இரண்டு வகை உணவை தருவதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளதாம்.