சானியா – சோயப் திருமண வரவேற்பு –சந்திரபாபு நாயுடு, திரையுலகினர் பங்கேற்பு
ஹைதராபாத் : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தெலுங்குத் திரையுலகினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சானியா, சோயப் திருமண வரவேற்பு நேற்று மாலை தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது. எளிமையான முறையில் இது நடந்தது.
1000 பேருக்கு அழைப்பிதழ் தரப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் 500 முதல் 600 பேர் வரை மட்டுமே வந்திருந்தனர். அரசியல் துறையிலிருந்து சந்திரபாபு நாயுடு மட்டுமே வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து யாருமே வரவில்லை.
பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் பிர்தோஸ், ஆசிக் அவானா தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர். இவர்கள் சானியாவுக்கு தங்க கிரீடத்தைப் பரிசாக சூட்டினர்.
பிர்தோஸ் கூறுகையில், சானியாவையும், சோயப்பையும், சியால்கோட் மற்றும் பாகிஸ்தான் மக்கள் சார்பில் வாழ்த்த வந்துள்ளோம். சானியாவுக்கு தங்க கிரீடம் சூட்டியுள்ளோம். இது சியோல்கோட் மற்றும் பாகிஸ்தான் மக்களின் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த திருமணம் இரு நாட்டு மக்களிடையே நட்பையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த உதவும் என நம்புகிறோம் என்றார் பிர்தோஸ்.