எஸ்.ஐ. வெற்றிவேல் படுகொலை – கைதான எஸ்.ஐ. சிவசுப்ரமணியனின் மனைவிக்கு ஜாமீன்
திருநெல்வேலி: ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் படுகொலை வழக்கில் கைதான கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியனின் மனைவி சிவகாமிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
கடையம் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், தனது மனைவி சிவகாமியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் சிவகாமியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் என்று தவறுதலாக ஆள் மாறாட்டத்தில் ஆழ்வார் குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கொலை செய்தனர்.
இது தொடர்பாக சிவகாமி, அவரது 4 சகோதரர்கள், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை இன்னும் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என்று கீழ்கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டியது இருப்பதாலும், விசாரணைக்கு பாதகம் ஏற்படும் என்று கருதுவதாலும் ஜாமீனில் விடக்கூடாது என்று அரசு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி சுந்தரேஷ் விசாரணை நடத்தி சண்முகசுந்தரம், கள்ளபிரான், முருகேசன் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இருப்பினும், சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமியின் ஜாமீன் மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
சிவகாமி தினமும் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சிவகாமி இன்று சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.