தரம்சாலாவில் பிசிசிஐ கூட்டம்- லலித் மோடிக்கு அழைப்பில்லை
டெல்லி: பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராகக் கருதப்பட்ட லலித் மோடிக்கு முதல் முறையாக பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் தொடர்பாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூட்டியுள்ள உயர் நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள லலித் மோடிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
கொச்சி ஐபிஎல் அணியை ஏலம் எடுத்தது தொடர்பாக மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் - ஐபிஎல் அமைப்பாளர் லலித் மோடி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது அரசியல் சர்ச்சையாக மாறியதுடன், ஐபிஎல் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் அளவுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் அமைப்பு தனியார் நிறுவனம்தான் என்றாலும், அரசு அமைப்புக்கு உரிய கவுரம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது முதல்முறையாக ஒரு தனியார் அலுவலகத்தில் அரசு ஏஜென்ஸிகள் மேற்கொள்ளும் அனைத்து சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
மேலும் ஐபிஎல் விவகாரத்தால், பிசிசிஐக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்ந்த அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தொடர்பான அனைத்து வருமானங்களும் இனி வரி செலுத்தும் இனமாக பார்க்கப்பட வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக கிரிக்கெட் வாரியத்தின் உயர்நிலைத் தலைவர்கள் தர்மசாலாவில் கூடினர்.
இந்தக் கூட்டத்துக்கு லலித் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஐபிஎல் அமைப்பில் லலித் மோடியின் அதிகாரத்தைக் குறைக்கும் பிசிசிஐ நடவடிக்கையின் முதல்படியாக இது பார்க்கப்படுகிறது.