நாவடக்கத்துடன் பேசுமாறு தரூர் உதவியாளருக்கு காங். சூடு
டெல்லி : தனது உதவியாளர் ஜேக்கப் ஜோசப்பை நாவடக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சசி தரூர் அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கண்டிப்புடன் கூறியுள்ளது.
லலித் மோடிக்கு எதிராக தரூரை விட படு காட்டமாக கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் ஜோசப். இவர் தரூரின் ஸ்பெஷல் டூட்டி ஆபிசர் ஆவார்.
மோடி ஒரு போதைப் பொருள் கடத்தல்காரர், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்த்தாக கூறி கைது செய்யப்பட்டவர் என்றெல்லாம் ட்விட்டர் மூலம் செய்தி பரப்பி வருகிறார் ஜோசப்.
அத்தோடு நில்லாமல் தரூருக்கு கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவரே செய்தி பரப்பினார். ஆனால் தரூருக்குப் பாதுகாப்பை அதிகரிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகமும், டெல்லி காவல்துறையும் உடனடியாக மறுத்து விட்டன.
அதேசமயம், தரூருக்கு வந்த கொலை மிரட்டலும் கூட வழக்கமாக விஐபிகளுக்கு வரும் மிரட்டல்தான் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால் தேவையில்லாமல் அதைப் பெரிதுபடுத்தி ஊதி விட்டார் ஜேக்கப்.
இந்த நிலையில் ஜேக்கப்பை இந்த விவகாரத்திற்குள் இழுத்துள்ளது பாஜக. ஐபிஎல் ஏலம் நடந்தபோது அங்கு ஜேக்கப் இருந்துள்ளார். இதற்கு என்ன காரணம். இவருக்கும், அந்த ஏலத்தில் கலந்து கொண்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்று பாஜக சரமாரியாக கேட்டுள்ளது.
ஜேக்கப்பும் ஒரு மலையாளிதான். ஜேக்கப்பும், தரூரும் டெல்லியில உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர்கள். துபாயில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.
ஒரு பக்கம் தரூரால் சர்ச்சை, இன்னொரு பக்கம் ஜேக்கப்பால் சலசலப்பு என்று டென்ஷன் கூடி வருவதால் காங்கிரஸ் கட்சி கடுப்படைந்துள்ளது. ஜேக்கப் நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பேசக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்துமாறு தரூருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.