அனைத்து ஐபிஎல் அணிகளின் நிதி விவகாரங்களையும் ஆராய வருமான வரித்துறை முடிவு
டெல்லி: ஐபிஎல் கொச்சி அணியின் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து ஐபிஎல் அமைப்பில் உள்ள 10 அணிகளின் நிதி விவகாரங்களையும் முழுமையாக ஆராய வருமான வரித்துறை முடிவு செய்தள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இதன் மூலம் உருவான அமைப்புதான் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் ஆகும். முன்பு இந்த அமைப்பில 8 அணிகள் இருந்தன.
சமீபத்தில் புதிதாக இரண்டு ஐபிஎல் அணிகள் இணைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ஐபிஎல் கொச்சி. இதுதான் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஐபிஎல் கொச்சி அணியை வாங்கியது மும்பையைச் சேர்ந்த கெய்க்வாட் சகோதரர்களுக்குச் சொந்தமான ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆனால் தனது காதலியான சுனந்தாவுக்காக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் தரூரே மறைமுகமாக களத்தில் இறங்கி அணியை வாங்க உதவினார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.
மேலும், கொச்சி அணியின் பங்குதாரர்கள் குறித்தும் சர்ச்சை எழுந்தது – லலித் மோடி வெளியிட்ட ட்விட்டர் செய்தியால்.
மேலும், ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான கெய்க்வாட் சகோதரர்கள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கொச்சி அணி விவகாரத்தை ஆராய வருமான வரித்துறை முடிவு செய்தது.
இதையடுத்து சமீபத்தில் மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகம், மோடியின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தற்போது மொத்தம் உள்ள 10 அணிகளையும் அலசி ஆராய வருமான வரித்துறை முடிவுக்கு வந்துள்ளதாம்.
மோடியைத் தொடர்ந்து 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோரை விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது, அதை எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்கள், எப்படி முதலீடு செய்கிறார்கள் என்பது உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை விசாரிக்கவுள்ளதாம்.
இதுதொடர்பான விசாரணை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிகிறது. மேலும் மும்பையில தனியாக ஒரு பிரிவையும் வருமான வரித்துறை தொடங்கியுள்ளதாம். இன்னும் 2 மாதத்திற்குள் இந்த விசாரணையை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஐபிஎல்லை ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாக வருமான வரித்துறை அங்கீகரிக்கவில்லை. இதனால் தற்போதைய விசாரணைகள் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் உள்ளது.
ஐபிஎல் அமைப்பு தொடங்கப்பட்டபோதே மோடிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி கணக்குகளைத் தாக்கல் செய்யமாறு கூறியிருந்த்து. ஆனால் அதைத் தூக்கி கிடப்பில் போட்டு விட்டார் மோடி. தற்போது அவர் வசமாக சிக்கியிருப்பதாக தெரிகிறது.
எனவே கொச்சி விவகாரத்தை வைத்து ஒட்டுமொத்த ஐபிஎல் நிர்வாகத்தின் நிதி கட்டமைப்புகளை ஆராய வருமான வரித்துறை தீர்மானித்துள்ளதாம்.